Tuesday, April 26, 2011

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரே போய் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இதை தள்ளிப்போடும்படி மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக, நிறுவனங்கள், முடிவை தள்ளிப்போட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.

மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.

No comments: