Thursday, April 7, 2011

கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு


தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஓட்டு கேட்டு பேராவூரணி பெரியார் சிலை அருகே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் என்னை இழுக்க அழகிரி முயற்சித்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. மனிதனின் அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. விஜயகாந்த் கோபக்காரன் தான். அந்த கோபம் பிள்ளையை படிக்க சொல்லி தந்தை கண்டிப்பது போன்றது. அதை பெரிது படுத்துகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

5 ஆண்டுகளாக நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கவில்லை. துணிவு இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேரடியாக அவர் பதில் சொல்லட்டும். சமச்சீர் கல்வி என்பது சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும். கல்வி, கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாடம் தான் சமச்சீர் கல்வி என்று கருணாநிதி சொல்கிறார்.

கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையில் தமிழ் இனத்தை காட்டி கொடுத்து அந்த இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார். கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல தி.மு.க.விடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விட்டோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வாக்காளர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments: