Tuesday, April 26, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ., தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது.அந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட ஒன்பது பேர்களின் மீது, ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 420 (ஏமாற்றுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்) பிரிவின் கீழும், ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) பிரிவின் கீழும் மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) பிரிவின் கீழும் அதிக அளவில் குற்றங்களை இந்த ஒன்பது பேரும் செய்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், சி.பி.ஐ., தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை நேற்று பிற்பகல் 3 மணியளவில் தாக்கல் செய்தது. டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.சைனி முன் தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, சுவான் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, அசீப் பல்வா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் இருக்கும் ஷாகித் பல்வாவின் சகோதரர் தான் இந்த அசீப் பல்வா.
* ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக அளித்த லஞ்சப்பணம் 214 கோடி ரூபாய் பற்றியும்; அந்த பணம் எந்தெந்த வழிகளில் கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டது என்பது பற்றியும்; இந்த பண பரிவர்த்தனைகளில் பங்கு பெற்ற நபர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* கலைஞர் "டிவி'க்கு பணம் வழங்கியதாக, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
* இந்த ஐந்து பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஐபிசி) பிரிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்தனர் என குற்றச் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயாளு இல்லை: குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு இடம் பெறுவார் என்ற பரபரப்பு இருந்தது. கலைஞர் "டிவி'யில் அதிகபட்சமாக 60 சதவீத பங்குகளை தயாளு வைத்திருந்தார். எனவே, அவர் பெயர் இடம்பெறுமென செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் பெயர் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

48 பக்கம்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 48 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில் கனிமொழி பற்றி குறிப்பிடும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு தீவிர பங்காற்றினார் என்றும், தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பல்வா, கோயங்கா உள்ளிட்ட பலரும் எவ்வாறு கலைஞர் "டிவி'க்கு தங்களது நிறுவனங்கள் மூலமாக லஞ்சப் பணத்தை அளிப்பதற்காக பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகையின் முகப்பில், சப்ளிமென்டரி-1 என்று கூறப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

கனிமொழி மே 6ல் ஆஜர் : குற்றப்பத்திரிகையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மாலையில் கூறுவதாக, 3.30 மணியளவில் நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து, மீண்டும் மாலை 5.45 மணியளவில், தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைனி, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.மேலும் அவரை, மே 6ம் தேதி, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகும்படியும் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதேபோல சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பும்படி கூறினார். ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் நாளை (இன்று)ஆஜர்படுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: