Monday, April 4, 2011

நான் தான் கற்றுக்கொடுத்தேன் பெயரை எழுத தெரியாதவர் வடிவேலு; நடிகர் சிங்கமுத்து தாக்கு

திருக்கோவிலூரில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.வேங்கடேசனை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போர் இல்லாத மண்ணில் வீரம் பிறக்குமா? சுவை இல்லா பழம் இனிக்குமா? புரட்சித்தலைவி இல்லாத தமிழக மண்ணில் ஏழைகளின் வாழ்வு சிறக்குமா? இல்லை புரட்சித்தலைவி ஆட்சியில்தான் ஏழைகள் வாழ்வு சிறக்கும். சின்னகவுண்டர் விஜயகாந்த்துக்கு கால் அமுக்கிவிட்ட வடிவேலு புரட்சிக்கலைஞர் மீது குற்றம்சாட்ட என்ன தகுதி இருக்கின்றது.

புரட்சிக்கலைஞரை பொறுத்தவரை சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவரை எல்லாமல் நடிக்க வாய்ப்புகொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்து வாழவைத்திருக்கின்றார். வடிவேலு டம்மிபீஸ் ஆவார். தன்பெயரை வடிவேலு என எழுததெரியாமல், வடிகேலு என்று எழுதிய உனக்கு சிலேட்டில் சரியாக எழுத கற்றுக்கொடுத்தவன் நான்.

மதுரையில் இருந்து கட்டிய வேட்டியோடு வந்த உனக்கு புரட்சிக்கலைஞரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? தமிழக மக்கள் மனதில் இடம்பெற்றவர் விஜயகாந்த் ஆவார். அதனால்தான் புரட்சித்தலைவி தனது கூட்டணியில் அவருக்கு முதலாவதாக இடமளித்தார். தமிழ் பெண்களின் கற்பை பற்றி தவறாக பேசிய குஷ்பு தி.மு.க.வுக்கு ஓட்டுகேட்கிறார். இந்திக்கு எதிரான இயக்கம் என்று கூறிய தி.மு.க.வுக்கு இந்தி பேசுபவர் ஓட்டு கேட்கும் நிலை உள்ளது.

குஷ்புவை தமிழகத்தை விட்டே துரத்தவேண்டும் என்று கூறிய ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இன்று தனது கட்சி வேட்பாளர்களுக்கே குஷ்புவை வைத்து ஓட்டுகேட்கின்றனர். தி.மு.க வுக்கு சென்றுவிட்ட வடிவேலு இனி அங்கிருந்து தப்ப முடியாது. கரடியை பிடித்த கதைதான் வடிவேலுவுக்கும் ஏற்படும். ஏன் என்றால் வடிவேலு தப்பிக்க நினைத்தாலும் தி.மு.க விடமிருந்து மீளமுடியாது. தமிழ் மக்களின் வாழ்வு செழிக்கவேண்டுமானால் புரட்சித்தலைவி ஆட்சி மலரவேண்டும்.

மேற்கண்டவாறு நடிகர் சிங்கமுத்து பேசினார்.

No comments: