Saturday, April 30, 2011

ரிசல்ட் தேதி மாற்றம்; அமைச்சர் அறிவிப்பு: 9-ந்தேதி “பிளஸ்-2” தேர்வு முடிவு; எஸ்.எஸ்.எல்.சி. பின்னர் அறிவிக்கப்படும்


தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைந்தது. 7 லட்சத்து 24 ஆயிரத்து 205 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 மாணவிகள். மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் தனியாக 57 ஆயிரத்து 58 பேர் எழுதினார்கள். மொத்தம் 1,890 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.

தேர்தல் அறிவித்த பிறகும் தடையில்லாமல் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்தது. மதிப் பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அரசு பள்ளி கல்வி துறை செயலாளர் சபீதா அளித்த பேட்டியில் மே 14-ந்தேதி பிளஸ்-2 முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்தார்.

இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25-ந்தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார். இதுபற்றி கருத்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன்னிடம் கலந்து பேசாமலேயே பரீட்சை முடிவு தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை வெளியிடப் படும். தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசு தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணைய தளம் எஸ்.எம்.எஸ்., தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: