Saturday, April 2, 2011

விஜயகாந்தை விமர்சிக்க வடிவேலுக்கு தகுதியில்லை; நடிகர் சிங்கமுத்து ஆவேசம்


சினிமாவில் காமெடியில் இணைந்து கலக்கிய நடிகர் வடிவேலுவும் சிங்கமுத்துவும் நிலப் பிரச்சினையில் எதிரிகள் ஆனார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் வடிவேலு, விஜயகாந்தை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளுத்து கட்டுகிறார்.

வடிவேலுக்கு எதிராக களம் இறங்க சிங்கமுத்துவும் முடிவு செய்தார். நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். உடனே அவரை பிரசார களத்தில் இறக்க அ.தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை சென்னையில் பிரசாரத்தை தொடங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து கிரீம்ஸ் ரோட்டில் பிரசாரம் செய்தார். வடிவேலுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்து களம் இறங்கியதால் தேர்தல் பிரசார களம் அனல் பறக்கிறது.
நடிகர் சிங்கமுத்து பேசியதாவது:-

இதற்கு மேலும் துன்பப்பட முடியாது. எனவேதான் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் விரும்புகிறார்கள். விலைவாசி உயர்வு, மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புரட்சித் தலைவியால் தான் தமிழக மக்களை காப்பாற்ற முடியும். தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 2ஜியில் தப்பிப்பதுதான் அவர்கள் கவலை. புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப்பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.

நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்பது தெரியாதா? உன்னைப் பற்றி எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை.முன்னாள் அமைச்சராக இருந்த ஒரு நல்ல வேட்பாளரை புரட்சித்தலைவி தந்துள்ளார். பா.வளர்மதியை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் நுங்கை மாறன், சிவராஜ், பாஸ்கர் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: