Monday, April 4, 2011

காங்கிரசை தோற்கடிப்பதே என் லட்சியம்; நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தை ஆதரித்து பகண்டை கூட்டு ரோட்டில் நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அதனை தோற்கடிக்கவேண்டும் என்ற லட்சிய உணர்வோடு உங்களை தேடிவந்திருக்கின்றோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய பகைவனாக உள்ளது.

நம் தமிழ் மக்களின் உரிமை, உடமை, உணர்ச்சி, உயிர் ஆகியவற்றிற்க்கு எதிராக இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி ஆகும். எனவே அதனை தோற்கடிக்கவேண்டும். கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழ் மீனவர்கள் இதுவரை 550 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஒரு தமிழ் மீனவன் குடும்பத்துக்காவது காங்கிரசார் அனுதாபம் தெரிவித்தது உண்டா? நமது வலிமை மிக்க ரானுவம் தமிழ் மீனவரை காப்பற்றவில்லை. அதேசமயம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களையும் நமது ரானுவம் பிடிக்கவில்லை.

எல்லை தாண்டி செல்லும் கேரள மீனவர்களை இதுவரை இலங்கை கடற்படையினர் தாக்கப்பட்டதில்லை. இது ஏன்? தமிழக மீனவர்கள் பற்றி கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.

எனவே இதனை தேசிய பிரச்சனையாக கருதுகின்றோம். உலகத்திலேயே தமிழனுக்கு இரண்டு இடம் சொந்தம் ஒன்று தமிழ் மண் மற்றொன்று ஈழத்தமிழ் மண் ஆகும். தமிழீழ மண்ணின் உரிமைக்காக போராடிய நமது சகோதர்களை நேரடியாக தாக்கமுடியாத சிங்களனுக்கு இந்த காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கியது.

அதன் மூலம் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள மக்களை கம்பிவேலியின் உள்ளே அடைத்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டைவிட்டே ஓட ஓட விரட்டவேண்டாமா? மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் அந்த பணத்தை நம்மிடம் தரும்போது வாங்குவதற்கு கவலைப்படாதீர்கள்.

வாங்கிய பணத்தை கோவிலில் சாமிக்கு மஞ்சள் துணிகட்டி உண்டியலில் தட்சணையாக போடுங்கள். முரசு சின்னத்திற்க்கு வாக்களித்து விஜயகாந்தை ஆதரிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு சீமான் பேசினார்.

கூட்டத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் திலீபன், மாவட்ட ஒருங்கினைப்பாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments: