Sunday, October 26, 2014

தேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்


பசும்பொன்னில் நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:– மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவின் அடிப்படையில் வாடகை வாகனங்கள், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை வர அனுமதி கிடையாது. 30–ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் விழாவுக்கு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனத்தில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வருபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வாகன பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுனரின் உரிமம், வாகனத் தில் பயணம் செய்வோரின் விவரம் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வருகிற 22–ந்தேதிக்குள் தெரிவித்து அதற்கான அனுமதி சான்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டு அந்தந்த வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இதனை சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணிப்பார்கள். சரக்கு வாகனங்களில் வருவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வரவோ, ஒலி பெருக்கிகள் பொருத்துவதற்கோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது. மேலும் விழாவுக்கு வரும் வாகனங்கள் சாலையோரங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. விழாவுக்கு நடை பயணமாக வர அனுமதி கிடையாது. பசும்பொன் கிராமத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜோதி ஓட்டம் தேவர் நினைவிடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்திக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்களில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வரவேண்டும். ஜோதி எடுப்பது தொடர்பான பொருட்கள், ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட எதனையும் பஸ்சில் எடுத்துச் செல்லக்கூடாது. பசும்பொன் கிராமத்தில் மட்டும் பிளக்ஸ் போர்டு போலீசாரின் அனுமதி பெற்ற பின்னர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். பிளக்ஸ் போர்டில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து கமுதி போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். விழாவுக்கு வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22–ந்தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும். அவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்களும் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் அதிக பட்சமாக 3 வாகனங்கள் வரலாம். விழாவை அமைதியாக நடைபெற மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments: