Monday, October 17, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டு போட முடியாமல் நடிகர் செந்தில் ஏமாற்றம்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இன்று காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்று இருந்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் புத்தகம் முழுக்க அலசி தேடிப்பார்த்தார்கள். ஆனால் பெயர் இல்லை. ஒரு வேளை பக்கத்து வாக்கு சாவடியில் பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனால் செந்தில் பாரதிதாசன் தெரு வாக்கு சாவடிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவரது பெயர் இல்லை.

2 மணிநேர அலைக்கழிப்புக்கு பிறகு நடிகர் செந்தில் ஓட்டுபோட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதுபற்றி நடிகர் செந்தில் கூறியதாவது:-

நான் முதல்-அமைச்சர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டு விட்டு செல்ல வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லை. இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். எனது குடும்பத்தின் 5 ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: