Monday, October 10, 2011

வடிவேல் சேர்ந்ததால் தி.மு.க. அழிந்தது:அன்னூரில் சிங்கமுத்து பிரசாரம்

வடிவேலு தி.மு.க.வில் சேர்ந்ததால் அக்கட்சி அழிந்து வருகிறது என்று சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சித்தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அன்னூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்த போது பேசியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நலத்திட்டங்கள் தவறாமல் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேரும். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் தி.மு.க.வினர் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காமல் செய்து விடுவார்கள். தி.மு.க.வினர் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் உலக அளவில் தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் தான் உள்ளன. சட்ட சபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர் தான் வடிவேலு.

கருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர். மேற்கண்டவாறு சிங்க முத்து பேசினார்.

No comments: