Wednesday, October 16, 2013

தேவர் ஜயந்தி விழா: புதிய கட்டுப்பாடுகள், தடை உத்தரவை நீக்க மூமுக வேண்டுகோள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (மூமுக) வலியுறுத்தியுள்ளது. மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மூமுக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் முக்குலத்தோர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவரினம் என ஒரே பெயரில் அழைக்க தமிழக அரசு 1995 இல் வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி, முக்குலத்தோர் அனைவரையும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் தேவர் ஜயந்தி விழாவின்போது சிவகங்கை, மானாமதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்துக்கு முமூக சார்பில் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பசும்பொன் கிராமத்துக்கு நடைப்பயணமாக செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. .

No comments: