Friday, October 25, 2013

மானாமதுரை, திருப்புவனம் சோதனைச் சாவடிகளில் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்படும் போலீஸ் சோதனைச் சாவடிகளில் தேவர் குருபூஜைக்கு செல்லும் சொந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அவரது குருபூஜை நடைபெறுகிறது. குருபூஜையில் கலந்து கொள்ள சென்னை, திருச்சி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் திருப்புவனம், மானாமதுரையை கடந்துதான் செல்ல வேண்டும். குருபூஜைக்கு சொந்த வாகனத்தில் மட்டுமே வர வேண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது. வாடகை வாகனம் வந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் சொந்த வாகனங்களில் வருபவர்கள் தாங்கள் புறப்படும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வாகனங்களின் ஆவணங்களைக் காட்டி அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருபூஜைக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் சிறப்பு போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. குருபூஜை விழாவுக்கு திடீரென சொந்த வாகனங்களில் புறப்பட்டு வருபவர்கள் இந்தச் சோதனைச் சாவடிகளில் வாகனங்களின் ஆவணங்களை காண்பித்து அங்கேயே அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு பசும்பொன் செல்ல போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. .

No comments: