Tuesday, October 1, 2013

களங்கமற்றவன் என்பதை நிரூபிப்பேன்: கருப்பசாமி பாண்டியன்.

நான் களங்கமற்றவன் என்பதை சட்டபூர்வமாக நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என, திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ.கருப்பசாமிபாண்டியன் கூறினார். கருப்பசாமிபாண்டியன் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழரசி என்பவர், டி.ஐ.ஜி.யிடம் கடந்த 17-ஆம் தேதி புகார் அளித்தார். இதுதொடர்பாக கருப்பசாமிபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோர் மீது குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து செங்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கருப்பசாமிபாண்டியனும், கார்த்திக்கும் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். குற்றாலம் காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கார்த்திக்கும், 10.30-க்கு கருப்பசாமிபாண்டியனும் 7 தினங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதித்துறை நடுவர் மாதவராமானுஜம் உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே கருப்பசாமிபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. நான் களங்கமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பேன். திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் . .

No comments: